அழகாபுரி அணையில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஆத்தூர் காமராஜர் அணை, வேடசந்தூர் அழகாபுரி அணை உள்பட பல்வேறு நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.
இதனை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தி வருகின்றனர். இவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் அதிகாரிகளையும் மீறி சிலர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செம்பட்டி அருகே ஆதிலட்சுமிபுரம் பிரிவு பகுதியில் செம்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் வேடசந்தூர் அழகாபுரி அணையில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் மருதுபாண்டி (வயது24) என்பவரை கைது செய்து டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.