ரெயில்வே பகுதியில் மரம் வெட்டி விற்ற பணியாளர் உள்பட 4 பேர் கைது
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பாலம்பூம்பட்டி பிரிவில் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக பழனி ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மதுரை கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், பழனி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடத்துக்குளம் பகுதியில் சென்று விசாரித்தனர். விசாரணையில் மடத்துக்குளத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளிகளான செல்வராஜ் (வயது 50), கருப்பசாமி (39), சிவக்குமார் (31) ஆகியோர் பாலம்பூம்பட்டி பிரிவில் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேம்பு உள்ளிட்ட 14 மரங்களை வெட்டி, லாரியில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் விற்றது தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு ரெயில்வே பணியாளர் பழனி சந்திரசேகரன் (43) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இதில் சந்திரசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜ் உள்ளிட்ட 3 பேர் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.