செய்திகள்
சாலை மறியல்

வத்தலக்குண்டு அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2019-09-16 10:22 GMT   |   Update On 2019-09-16 10:22 GMT
வத்தலக்குண்டு அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி சீரங்கன் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்களை வைத்துக்கொண்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம், அரசுக்கு சொந்தமான இடங்கள், மயானம் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தினர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று வத்தலக்குண்டு- கெங்கு வார்பட்டி சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வேதா மற்றும் வத்தலக்குண்டு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகள் செய்த தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News