செய்திகள்
கைது

சாமிதோப்பு அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

Published On 2019-09-16 09:15 GMT   |   Update On 2019-09-16 09:15 GMT
சாமிதோப்பு அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அருகில் உள்ள செட்டிவிளையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது70). இவருக்கு ராஜசேகரன் (38), ராஜேஷ் (36) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்தநிலையில் ராமலிங்கம் தன்னுடைய சொத்துக்களை இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து உள்ளார். இதில் இளைய மகன் ராஜேஷ் தனக்கு குறைவான சொத்து கொடுத்ததாக கூறி நேற்று இரவு தந்தை ராமலிங்கத்திடம் தகராறு செய்துள்ளார். தகராறு கைகலப்பாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து தந்தை என்றும் பாராமல் ராமலிங்கத்தை வெட்டி உள்ளார். ராமலிங்கத்தின் உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு உள்ளது.

இதைப்பார்த்த ராஜேசின் மனைவி அனந்தநாயகி (32) தன்னுடைய கணவர் ராஜேசிடம் இருந்து அரிவாளை பறிக்க முயன்று உள்ளார். இதில் அனந்த நாயகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. வெட்டுக் காயம் ஏற்பட்ட ராமலிங்கம் மற்றும் அனந்த நாயகியை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தென்தாமரை குளம் போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்தார்.

Tags:    

Similar News