செய்திகள்
கைது

அரசு மருத்துவனை ஒப்பந்தப் பணியாளர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுகாதாரத்துறை ஊழியர் கைது

Published On 2019-09-14 07:13 GMT   |   Update On 2019-09-14 07:13 GMT
அரசு மருத்துவனை ஒப்பந்தப் பணியாளர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுகாதாரத்துறை ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவுட்சோர்சிங் மூலம் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 41 பேரிடம் மருத்துவத் துறையில் நிரந்தர பணி வாங்கி தருவதாக கூறி 2 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட 41 பேர் திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேலிடம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி புகார் அளித்தனர். அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநர் வேலை பார்த்த செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், பாலன் மருந்தாளுநர்கள் அப்துல் முகம்மது பாரி, அரவிந்தராஜ், ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பாண்டுரங்கன் உள்ளிட்ட 11 பேர் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநர் வேலை பார்த்த செல்வராஜை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News