தேனியில் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகியை தாக்கிய கும்பல்
தேனி:
தேனி சுப்பன் தெருவைச் சேர்ந்த பாண்டி மனைவி சந்தியா. இவர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சீட்டு பிடித்து வந்தார். சம்பவத்தன்று மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இருந்த போது சிலர் தாங்கள் கட்டிய சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என தகராறு செய்தனர். இந்த தகராறில் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் சந்தியாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் தேனி போலீசார் போடி வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த குமரேசன், அவரது மனைவி புனித வள்ளி, பிரபா, விஜி, கார்த்தீஸ்வரி, ரகு, நந்தகோபால், மற்றும் 40 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் தென்கரை மாரியப்பன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வீர பிரகாஷ் (61). இவருக்கு அல்லிநகரம் அருகே சொந்த நிலம் உள்ளது. அந்த நிலத்தில் முள் வேலி அமைத்த குடிசை போட்டு வசித்து வருகிறார். சம்பவத்தன்று தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 6 பேர்கள் ஒன்று சேர்ந்து பிரகாஷ் நிலத்தில் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.