திருநின்றவூரில் பிறந்த நாளில் விஷவாயு தாக்கி வாலிபர் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெரத்தூர், மாந்திப்பை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சம்பத்குமார் (வயது 24).
இவர் தனது பிறந்த நாளையொட்டி திருநின்றவூர் ஓம்சக்தி நகரில் உள்ள சாமியார் ஒருவரை சந்தித்து ஆசி பெற நண்பரான நரேந்திரன் என்பவருடன் வந்தார்.
அப்போது சாமியாரின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சரி செய்ய சம்பத்குமார் முயன்றார்.
இதில் விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் நின்ற நரேந்திரன் அவரை காப்பாற்ற முயன்றார்.
அப்போது விஷவாயு தாக்கியதில் நரேந்திரனும் மயங்கினார். 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சம்பத் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நரேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.