செய்திகள்
கைது

கோவையில் கடை பூட்டிய நேரத்தில் டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது

Published On 2019-09-06 12:55 GMT   |   Update On 2019-09-06 12:55 GMT
கோவையில் கடை பூட்டிய நேரத்தில் மதுகேட்டதால் டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தி சுப்பிரமணியம் (வயது 62). இவர் கோவை ரத்னபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கடையை மூடி கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 வாலிபர்கள் வந்து மது கேட்டனர். அதற்கு நந்தி சுப்பிரமணியம் கடையை அடைத்துவிட்டேன் மது தரமுடியாது என்று கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் நந்தி சுப்பிரமணியத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பீர்பாட்டிலால் அவரை குத்தினர். இதில் அவருக்கு தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து அவர் ரத்னபுரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தி சுப்பிரமணியத்தை கத்தியால் குத்திய ரத்னபுரியை சேர்ந்த விஷ்ணு(22), முருகேசன்(38), தேவகோட்டையை சேர்ந்த மணிகண்டன்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கவுதம் என்வரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News