முத்துப்பேட்டை அருகே கோவை பதிவு எண் கொண்ட 3 கார்கள் பறிமுதல்
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்று இரவு ரோந்து சென்றார். அவர் ஜாம்பவானோடை தர்கா அருகில் சென்றபோது அப்பகுதியில் கோவை பதிவுஎண் கொண்ட 3 கார்கள் நிற்பதை கண்டார். நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் கோவை பதிவு எண் கொண்ட கார்கள் நிற்பதை கண்டு சந்தேகமடைந்த அவர் இதுதொடர்பாக கார்களை நிறுத்தியிருந்த தாஜூதீன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் 3 கார்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். அந்த கார்கள் கோவையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஜாம்பவானோடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.