செய்திகள்
இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்வதை படத்தில் காணலாம்.

சுடுகாட்டு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்

Published On 2019-09-05 00:42 GMT   |   Update On 2019-09-05 00:42 GMT
சுடுகாட்டு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது செஞ்சிபானம்பாக்கம் ஊராட்சி. இங்கு 1,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் எரியூட்டுவதற்கு பானம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்கின்றனர். இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இறப்பு ஏற்படும் சமயங்களில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் விளை நிலங்களில் இறங்கி செல்கின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், திருவள்ளூர் தாசில்தார் என அதிகாரிகளிடம் மனு அளித்தும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அவர்கள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த பகுதி மக்கள் தங்களுக்கு சுடுகாட்டு பாதையை முறையாக ஏற்படுத்தி தர வலியுறுத்தி பலமுறை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வயல் வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். காலதாமதம் செய்யாமல் சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கு தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News