கயத்தாறு அருகே வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி காலனி முதலாவது தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா. இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவில் கவிதா தனது வீட்டின் முன்பக்க வராண்டாவில் படுத்து தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் கவிதாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கத்தரிக்கோலால் துண்டித்து பறித்தார்.
அப்போது கண் விழித்த கவிதா ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டார். உடனே அவருடைய மகன்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, நகை பறித்த மர்மநபரை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நபர் இருளில் நகையுடன் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.