செய்திகள்
ஊத்தங்கரை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
ஊத்தங்கரை அருகே வயல் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கிங்கிலி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது55). விவசாயியான இவர் வீட்டின் அருகேயுள்ள தனது விவசாய நிலத்தில் இருக்கு செடிகளை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக ராமர் தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு நீரில் முழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்து இறந்த ராமர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.