செய்திகள்
சரத்குமார்

உள்ளாட்சி தேர்தலில் சமக போட்டி- சரத்குமார் பேட்டி

Published On 2019-09-02 11:54 GMT   |   Update On 2019-09-02 11:54 GMT
சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது என்று சரத்குமார் கூறியுள்ளார்.

கோவை:

கோவையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமை . அவருக்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை படிப்படியாக சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் உடனே பலனளிக்காது. காத்திருந்துதான் பார்க்க வேண்டும். வங்கிகள் இணைப்பு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றை இணைக்க முயற்சி செய்தார்கள். இப்போது பொதுத்துறை வங்கிகள் இணைத்திருப்பதால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எனவே ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான். மு .க. ஸ்டாலின் முன்பு சிங்கப்பூரை போல் சென்னையை மாற்றுவேன் என்று கூறினார். அவரும் வெளி நாடுகளுக்குச் சென்றார். வெளிநாட்டில் உள்ள நல்ல வி‌ஷயங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவது சரியாகத்தான் இருக்கும்.


ஆனால் ஸ்டாலின் எதிர்க்கட்சி என்பதற்காகவே விமர்சிப்பது தவறு. நல்ல வி‌ஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. நடிகர் சங்க தேர்தல் பிரச்சனை, தயாரிப்பாளர் சங்க பிரச்சினை எல்லாமே நல்லபடியாக முடிய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

நான் சினிமாவில் நடிக்கவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். இப்போது வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. சமூகவலைதளங்களை விமர்சிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது .நல்ல வி‌ஷயங்களையும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும். ஒருவரை பற்றி தெரியாமல் தூரத்தில் இருந்து கொண்டு விமர்சிப்பது சரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News