செய்திகள்
ஒரத்தநாட்டில் மாணவர்களை தாக்கி பணம் பறிப்பு
ஒரத்தநாட்டில் மாணவர்களை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு சரபோஜி நகர் 2-வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன் (வயது 17). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது தம்பி பிரபஞ்சன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்ணன்-தம்பி 2 பேரும் நேற்று சைக்கிளில் சென்று ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.15 ஆயிரம் எடுத்து கொண்டு ஒரத்தநாடு தேரடி அருகே வந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சைக்கிளில் வந்த பிரவீன், பிரபஞ்சனை தாக்கி அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது பற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.