ராஜபாளையத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் பகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த 3 மாத காலமாக நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், திரும்ப வழங்கக்கோரியும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் முன்னிலையில் ஏராளமான தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
விருதுநகர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசா அருண்மொழி, ஏ.ஏ.எஸ். ஷ்யாம்ராஜா, மணிகண்டன் ராஜா, நகர தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, மாவட்ட மகளிரணி சுமதி, மாவட்ட மாணவரணி வேல்முருகன், தொண்டரணி கருப்பழகு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.