வெள்ளகோவில் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வெள்ளகோவில்:
ஓடிசா மாநிலம் பரித்பூரை சேர்ந்தவர் பரிவத்குமார் ஜினா(வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் ஈடுட்டிருந்த அவர் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் இறப்பதற்கு முன்பு ஒரு நம்பரில் இருந்து 9 முறை போன் வந்துள்ளது. அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்த போது அது சுவிட்ச் ஆப் என வந்தது. எனவே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.