செய்திகள்
கோப்பு படம்

பழனி, வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

Published On 2019-08-27 12:27 GMT   |   Update On 2019-08-27 12:27 GMT
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பழனி மற்றும் வத்தலக்குண்டுவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழனி:

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் நிலைய ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். பின்னர் திடீரென்று அவர்கள் சாலையின் நடுப்பகுதிக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. அனுமதியின்றி மறியலுக்கு முயன்றதாக 20 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதேபோல் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில செயலாளர் உலக நம்பி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஒன்றிய பொருளாளர் திராவிடன், மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆட்டோ சங்க தலைவர் மூக்கையா, கண்ணன், கருப்பையா, ராஜ்குமார், மெளரிஸ், வேலு, மதுரைவீரன், ஒன்றிய அமைப்பாளர்கள் வடிவேல், அழகு, தினேஷ், அரவிந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமரன் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது சேதப்படுத்திய சிலையை உடனே சரி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News