புழல் அருகே மோட்டார் சைக்கிளில் கார் மோதி 2 பேர் பலி
செங்குன்றம்:
திருமுல்லைவாயில், தென்றல் நகரை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 26). மாதவரத்தில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் உடன் வேலை பார்க்கும் புழல் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த ஆனந்தனுடன் (42) மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
புழல், சைக்கிள்ஷாப் நிறுத்தம் அருகே ஜி.என்.டி. சாலையில் வந்த போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத கார் டீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நிலைதடுமாறிய 2 பேரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த டில்லிபாபு, ஆனந்தன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் பற்றிய விபரம் தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.