செய்திகள்
கைது

எண்ணூரில் மாமூல் கேட்டு தொழிலாளி கடத்தல்- 2 பேர் கைது

Published On 2019-08-19 08:54 GMT   |   Update On 2019-08-19 08:54 GMT
எண்ணூரில் மாமூல் கேட்டு தொழிலாளியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

விழுப்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னையில் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று எண்ணூர் தாழங்குப்பம் பஸ் நிறுத்த நிழல் குடையை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த தாழங்குப்பத்தை சேர்ந்த கிளிண்டன், தினேஷ் ஆகியோர் பாலமுருகனிடம் “இங்கு வேலை செய்வதாக இருந்தால் ஒப்பந்ததாரரிடம் இருந்து மாமூல் வாங்கி தருமாறு கேட்டனர்.

இது குறித்து ஒப்பந்ததாரருக்கு போன் மூலம் பாலமுருகன் தகவல் கொடுத்தார்.

அதற்கு அவர் மாமூல் தர முடியாது என்று மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கிளிண்டன், தினேஷ் ஆகியோர் பாலமுருகனை காரில் கடத்திச் சென்றனர். மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி மாமூல் தரவில்லை என்றால் உன்னைவிட மாட்டோம் என்று மிரட்டினர்.

அப்போது அந்த வழியாக போலீசார் சிலர் வாகனத்தில் செல்வதை பார்த்து பால முருகன் கூச்சலிட்டார். இதில் சந்தேகம் அடைந்து போலீசார் காருக்கு அருகே வந்ததும் கிளிண்டன், தினேஷ் தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிவு செய்து தொழிலாளியை கடத்திய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News