செய்திகள்
திருட்டு

ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை - பணம் திருட்டு

Published On 2019-08-16 10:30 GMT   |   Update On 2019-08-16 10:30 GMT
உடுமலையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வளசுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ராஜேந்திரன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை, ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ராஜேந்திரன் தனது வீட்டில் இருந்த நகை, பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடுமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

உடுமலை பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ. 3 லட்சத்தை மொபட்டின் பெட்டியை உடைத்து திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.

உடுமலையில் உள்ள துணிக்கடை, காய்கறி கடைகளில் திருட்டு போனது. உடுமலை-பொள்ளாச்சி சாலையில் 4 கடைகளில் திருட்டு நடைபெற்றது. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ. 23 ஆயிரம் திருட்டு போனது.

தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவர்கள் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News