செய்திகள்
கொப்பரை தேங்காய்

பழனி கொப்பரை ஏல மையம் மூலம் ரூ.1½ கோடி பட்டுவாடா

Published On 2019-08-15 10:22 GMT   |   Update On 2019-08-15 10:22 GMT
பழனி கொப்பரை ஏல மையம் மூலம் 155 டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 873 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
பழனி:

பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயல் ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழனியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொப்பரை ஏல மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள மையத்துக்கு காங்கேயம், முத்தூர், பொள்ளாச்சி, மூலனூர், வெள்ளக்கோவில், சத்திரப்பட்டி, பழனி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

இங்கு விற்பனை செய்யும் கொப்பரைக்கான பணம் 24 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 7-ந்தேதி வரையில் பழனி கொப்பரை ஏல மையம் மூலம் 155 டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 873 விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.140-க்கு ஏலம் போனது. ஆனால் நேற்று நடந்த ஏலத்தில் 1 கிலோ ரூ.100-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News