செய்திகள்
திருவாரூரில் சுதந்திர தின கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தேசியக் கொடி ஏற்றினார்.
திருவாரூர்:
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து விழாவில் 15 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 38 காவல் துறையினருக்கும், 240 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், வேளாண்மை துறை, மின்வளத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 778 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.