செய்திகள்
கொள்ளை

மார்த்தாண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், பொருட்கள் கொள்ளை

Published On 2019-08-08 11:37 GMT   |   Update On 2019-08-08 11:37 GMT
மார்த்தாண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:

மார்த்தாண்டத்தை அடுத்த காட்டாத்துறை, வெள்ளியோடு பகுதியை சேர்ந்தவர் பாபா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

பாபாவின் மனைவி ஷீபா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஷீபா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் வீட்டை பூட்டிவிட்டு நெய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கேயே தங்கி இருந்தார்.

இன்று காலை வெள்ளியோட்டில் உள்ள ஷீபாவின் வீட்டின் கேட் உடைந்து கிடந்தது. வீட்டின் கதவும் திறந்து கிடந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் கண்டனர்.

அவர்கள் உடனே இது பற்றி நெய்யூரில் இருந்த ஷீபாவுக்கு தெரிவித்தனர். அவர் நெய்யூரில் இருந்து வெள்ளியோட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் சிதறி கிடந்தன. பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த டெலிவி‌ஷன் பெட்டியும் மாயமாகி இருந்தது.

ஷீபா வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை, பணம் மற்றும் பொருள்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஷீபா மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News