செய்திகள்
தற்கொலை

தஞ்சை அருகே காதலியுடன் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2019-08-07 09:35 GMT   |   Update On 2019-08-07 09:35 GMT
தஞ்சை அருகே காதலியுடன் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

நாமக்கல் மாவட்டம் சேவநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் சக்திவேல் (வயது20). தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள செங்கிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாணவர் சக்திவேல் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மதியம் உணவு இடைவேளையின் போது கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு சாப்பிட சென்றார். அதன்பின்னர் அவர் மதியம் கல்லூரிக்கு செல்லவில்லை.

நேற்று மாலை சக்திவேலுடன் கல்லூரி விடுதி அறையில் தங்கி இருந்த சக மாணவர்கள் கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு வந்த சக்திவேல் தங்கி இருந்த அறையை தட்டினர். கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் சக்திவேல் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மாணவர்கள் அறையின் கதவை உடைத்துள்ளனர்.

அப்போது அறையில் மின்விசிறியில் சக்திவேல் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சக்திவேலை மீட்டு சக்திவேலை செங்கிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேல் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

விடுதியில் அறைக்கு வந்த சக்திவேல் தனது காதலியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து செங்கிப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News