மேச்சேரி பஸ் நிலையத்தில் ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ராணுவ வீரர்
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் நேற்றுஇரவு ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேச்சேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, ஏட்டு பாபு ஆகியோர் அங்கு சென்று தகராறு செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
அப்போது அவர் சப்- இன்ஸ்பெக்டர் குருசாமி, ஏட்டு பாபு ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர் தர்மராஜ் (வயது 34) என்பதும் மேச்சேரி தெப்பக்குள வீதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் மேற்கு வங்காள மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அவர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசாரை தாக்கியதாக தர்மராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் மேச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.