செய்திகள்
செங்காந்தள் மலர்கள்

கூடலூர் வனப்பகுதியில், பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

Published On 2019-08-01 15:20 GMT   |   Update On 2019-08-01 15:20 GMT
கூடலூர் வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.
கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கமாக திகழும் கூடலூர் வனப்பகுதியில் அரிய வகை தாவரங்கள் மற்றும் மூலிகைகள், ஒவ்வொரு காலக்கட்டங்களில் நிலவும் காலநிலைகளுக்கு ஏற்ப வளருகின்றன. இதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் உள்ளன. கடந்த ஆண்டு நடுவட்டம், மசினகுடி, ஊட்டி மலைப்பாதைகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கின. இதுதவிர அபூர்வ மலர்கள் பூத்துக்குலுங்குகின்ற பகுதியாக கூடலூர் வனப்பகுதி காணப்படுகிறது. சங்க கால இலக்கியத்தில் 99 வகையான மலர்களை பற்றி பாடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய இடத்தை செங்காந்தள் மலர் பிடித்து உள்ளது. இதுதவிர தமிழ்நாட்டின் மாநில மலராகவும் செங்காந்தள் உள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் கூடலூர், தேவர்சோலை, நாடுகாணி, தேவாலா, ஓவேலி வனப்பகுதியில் செங்காந்தள் மலர்கள் பூக்கிறது. புதர்களுக்கு இடையே கொடிகள் போல் படர்ந்து இச்செடிகள் வளர்ந்து உள்ளன.

குளோரி யோசாசுபர்யா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செங்காந்தள் மலர் செடிகளின் கிழங்குகளை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படாது. மேலும் பாம்பு வி‌‌ஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட அருமருந்தாகவும் விளங்குகிறது. 

காடுகள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் செங்காந்தள் மலர் செடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் அழிவின்பட்டியலில் இவ்வகை மலர் செடிகள் இடம் பிடித்துள்ளது. தற்போது கூடலூர் வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.
Tags:    

Similar News