செய்திகள்
தற்கொலை

சேலம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2019-08-01 04:47 GMT   |   Update On 2019-08-01 04:47 GMT
சேலம் அம்மாப்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை பாலாஜிநகரை சேர்ந்தவர் பாஸ்கரன். புத்தக கடை ஊழியர்.

இவரது மகன் சஞ்சய் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 நாட்களாக சஞ்சய் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்தனர். ஆனாலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையே மனம் உடைந்த சஞ்சய் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.

இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறினர். பின்னர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சஞ்சயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழுது புரண்டனர்.

தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News