சங்கரன்கோவில் அருகே ஜவுளி வியாபாரியை கடத்தி பணம்-செல்போன் பறிப்பு: தொழிலாளி கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஜெகன் (வயது 33). இவர் திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் 10 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம்.
இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் திருச்சி செல்வதற்காக சம்பவத்தன்று சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்த தொழிலாளியான முத்துராஜ் என்பவர் அங்கு வந்தார். அவர் ஜெகனிடம் எனக்கு தெரிந்த டிராவல்ஸ் உள்ளது. அதன் மூலம் உங்களை திருச்சிக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் மறைவான இடத்திற்கு சென்றதும் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ஜெகனிடம் இருந்த பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு சென்றுவிட்டார்.
இது குறித்து ஜெகன் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துராஜை கைது செய்தனர்.