செய்திகள்
கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள கொள்ளையன்

வீடு புகுந்து திருட்டு - கொள்ளையனை கம்பத்தில் கட்டிவைத்து பொது மக்கள் தாக்குதல்

Published On 2019-07-25 07:36 GMT   |   Update On 2019-07-25 07:36 GMT
செவ்வாப்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையனை அப்பகுதி பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதி சி.டி.எச். சாலையில் ஹார்டுவர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து வீட்டில் நந்தகுமாரும், அவரது தாய் லோகம்மாளும் இருந்தனர். இன்று காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கடையை திறக்க சென்றனர்.

பின்னர் லோகம்மாள் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த வாலிபர் லோகம்மாளை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றார். அவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவன் திருநின்றவூரை சேர்ந்தவன் என்று தெரிகிறது.

இதுபற்றி வேப்பம்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவனிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News