செய்திகள்
வாலிபர் நீரில் மூழ்கி பலி

அரூர் அருகே வள்ளிமதுரை அணையில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2019-07-23 17:15 GMT   |   Update On 2019-07-23 17:15 GMT
அரூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் வள்ளிமதுரை அணையில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் காளிமுத்து (வயது 18). இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த நண்பர்களுடன் வள்ளிமதுரை அணைக்கு குளிக்க சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் அணையில் குளித்த போது காளிமுத்து திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் அணையில் மூழ்கி விட்டார். இதுகுறித்து காளிமுத்துவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அணைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அரூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை தேடினர். வெகுநேரமாகியும் காளிமுத்துவின் உடல் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அணையில் வாலிபர் காளிமுத்துவின் உடல் மிதந்தது. தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காளிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அணையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News