செய்திகள்
கைது

உண்டியல் பணம் கொள்ளை - குடிபோதையில் கோவிலிலேயே தூங்கியதால் சிக்கினான்

Published On 2019-07-23 15:59 GMT   |   Update On 2019-07-23 15:59 GMT
கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவன் குடிபோதையில் கோவிலிலேயே தூங்கி விட்டதால் பொதுமக்களிடம் சிக்கினான்.
புதுச்சேரி:

லாஸ்பேட்டையை அடுத்த முத்துலிங்கம் பேட்டையில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல் கோவில் அர்ச்சகர் பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு இரும்பு கம்பியால் நெம்பி வளைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறி கிடந்தது. அருகில் குடிபோதையில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கோவில் அறங்காவலர் குழுவினரிடமும், ஊர் பொதுமக்களிடமும் தெரிவித்தார்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த நபரை பிடித்து லாஸ்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த சங்கர் என்ற ஆட்டோ சங்கர் (வயது 24) என்பதும், ரவுடியான இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் நள்ளிரவு கோவில் கதவை இரும்பு கம்பியால் நெம்பி உள்ளே புகுந்த இவர் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து விட்டு குடிபோதையில் கோவிலிலேயே தூங்கிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News