செய்திகள்
மழை நிலவரம்

வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2019-07-22 03:02 GMT   |   Update On 2019-07-22 03:02 GMT
வெப்பசலனம் காரணமாக வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றனர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வால்பாறை, சோலையாறில் தலா 7 செ.மீ., பூண்டி, தேவலாவில் தலா 4 செ.மீ., காரைக்குடி, நடுவட்டம், தொழுதூரில் தலா 2 செ.மீ., பரங்கிப்பேட்டை, திருமனூர், பொள்ளாச்சி, தாமரைப்பாக்கம், சிவகிரி, கீழ் கோதையாறில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News