திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால் திண்டுக்கல் நகர் செம்பட்டி, சின்னாளப்பட்டி, ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் அடிக்கடி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூரிலும் குடிநீர்கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர். அப்போது அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.
ஆனால் ஆத்தூர், பூஞ்சேலை, முஸ்லிம் காலனி, நந்தனர் காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராகவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆனால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சித்தையன் கோட்டை சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான செம்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகள் வந்தால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.