செய்திகள்
கரடி (கோப்பு படம்)

மஞ்சூர் அருகே வி‌ஷம் வைத்து ஆண் கரடி கொலையா? வனத்துறையினர் விசாரணை

Published On 2019-07-18 11:34 GMT   |   Update On 2019-07-18 11:34 GMT
மஞ்சூர் அருகே ஆண் கரடி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கொலையா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள சன்னிசைடு என்ற இடத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பெரிய கரடி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ஜெய்கணேஷ், செல்வன் உள்ளிட்டோர் விரைந்து வந்து கரடியின் உடலை மீட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் ராஜமுரளி, பொன்கலைவாணி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் கரடியை அங்கேயே தீ வைத்து எரித்தனர். சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி வயது மூப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த பகுதிமக்கள் இங்கு கரடிகளுக்கு வி‌ஷம் வைக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே யாரும் வி‌ஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்றனர். பிரேத பரிசோதனை வந்த பின்பே கரடி வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News