செய்திகள்
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

கண்டமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்- புதுவை ரெயில் தப்பியது

Published On 2019-07-14 12:36 GMT   |   Update On 2019-07-14 12:36 GMT
கண்டமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் புதுவை ரெயில் தப்பியது. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் தாமதாக சென்றன.

கண்டமங்கலம்:

புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுஅதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு அந்த ரெயில் புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். காலை 6 மணிக்கு அந்த ரெயில் கண்டமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள கேட் கீப்பருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் ரெயில் நிலைய அதிகாரியிடம் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாக கூறினார். உடனே ரெயில் நிலைய அதிகாரிகள் புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு புறப்பட்டு வரும் பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவரிடம் இதுபற்றி வாக்கி டாக்கி மூலம் கூறினர். இதை கேட்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். பின்பு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரெயில் திடீரென்று நிறுத்தப்படடதால் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். என்னமோ ஏதோ எனநினைத்து கீழே இறங்கினர்.

அப்போது என்ஜின் டிரைவர்கள் கீழே இறங்கி சென்றுபார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டனர். உடனே அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் இருந்த விரிசலை சரி செய்தனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் புதுவை ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சென்னையிலிருந்து புதுவை நோக்கி செல்லும் பயணிகள் விரைவு ரெயில் கண்டமங்கலம் ரெயில்வே நிலையத்தில் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் தாமதாக சென்றன. பின்னர் தண்டவாளம் சீரமைத்த பின் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News