பிரபல ரவுடி என கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40) ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வினோபாஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாங்கள் சங்கனூர் பகுதியை சேர்ந்த பெரிய ரவுடி என மிரட்டி கார்த்திக்கிடம் பணம் பறிக்க முயன்றனர்.அவர் கொடுக்க மறுத்ததால் அவரது பையில் இருந்த ரூ. 750-ஐ பறித்து கொண்டு சென்று விட்டனர். இது குறித்து கார்த்திக் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கிடம் பணம் பறித்த காமராஜர்புரத்தை சேர்ந்த பிரசாத் (22),ராஜேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாக்கியசாமி. இவரது மனைவி ஞான புஷ்பம் (63). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் நடந்து சென்றார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஞானபுஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.