செய்திகள்
கொலை

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை

Published On 2019-07-09 09:59 GMT   |   Update On 2019-07-09 09:59 GMT
நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதே மார்க்கெட்டில் காய்கறி கடை ஒன்றில் தேவநாதன் (45) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

தமிழ்வாணனுக்கும், தேவநாதனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம்.

நேற்று இரவும் அதேபோல அவர்களுக்குள் சண்டை வந்தது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்வாணன் இரவில் கோழிக்கடையிலேயே படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல நேற்று இரவு அங்கு படுத்து தூங்கினார். இன்று காலை 7 மணி வரை தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது தேவநாதன் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து வந்து தமிழ்வாணன் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே தமிழ்வாணன் உயிரிழந்தார்.

இதுபற்றி உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், செந்தில்குமார் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கொலையில் ஈடுபட்ட தேவநாதன் போலீசில் சிக்கினார். அவரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையால் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு காணப்பட்டது.

கொலையுண்ட தமிழ்வாணனுக்கு திருமணம் ஆகவில்லை.

Tags:    

Similar News