செய்திகள்
தென்திருப்பேரையில் காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை
தென்திருப்பேரையில் காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை சுப்பையா தெருவை சேர்ந்தவர் முத்து. இவர் பந்தல் காண்டிராக்டராக உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். கடந்த 4-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.38 ஆயிரம் பணம், பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அவர் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தென்திருப்பேரை தேரடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் மாயாண்டி (வயது26) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் முத்து வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர்.
இது சம்பந்தமாக சப்- இன்ஸ்பெக்டர் சிவலிங்க பெருமாள் மற்றும் போலீசார் மாயாண்டியை கைது செய்தனர்.