வம்பாகீரப்பாளையத்தில் 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். தச்சு தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 42). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே விநாயகம் வெளியூர்களுக்கு சென்று அங்கு தங்கி இருந்து தச்சு தொழில் செய்வது வழக்கம். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு தச்சு வேலை செய்ய சென்றார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து விநாயகம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சித்ரா வேலை செய்த ஓட்டலில் விசாரித்த போது சில நாட்களாக சித்ரா வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் சென்று விநாயகம் தேடினார். ஆனால், எங்கும் அவர்கள் இல்லை.
இதையடுத்து விநாயகம் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளுடன் சித்ராவை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.