செய்திகள்
தமிழக சட்டசபை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது

Published On 2019-07-05 09:16 GMT   |   Update On 2019-07-05 09:16 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலால் வரும் 30-ம் தேதி முடிவடைய வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பத்து நாட்கள் முன்னதாக 20-ம் தேதியே நிறைவடைகிறது.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. ஜூலை 30 வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையில்,  முன்னர் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி  இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.  இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலால் வரும் 30-ம் தேதி முடிவடைய வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பத்து நாட்கள் முன்னதாக 20-ம் தேதியே நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News