செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2019-06-28 12:27 GMT   |   Update On 2019-06-28 12:27 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை:

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

இதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. ஒரே நேரத்தில் எப்படி 20,000 பேர் கூடினார்கள் என தெரியவில்லை. போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கியதும் சீன நிறுவனம் தான் என வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியது.



இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா தரப்பு தனது வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. அதில், மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆலையை மூட உத்தரவிட முடியாது. மாசு ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? என கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News