search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாந்தா நிறுவனம்"

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

    இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

    1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

    மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

    வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?

    தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

    காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

    எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
     
    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.



    இதேபோல், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.

    தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #sterliteplant #supremecourt

    தஞ்சாவூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எதற்காக மூட வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்க கூடியது. இந்த ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் நச்சுபுகையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக மாசு அடைந்து வருகிறது. ஆலையில் இருந்து நச்சுபுகை வெளியேற 4 புகைபோக்கி குழாய்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு புகைபோக்கி குழாய் தான் உள்ளது. இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் என்று வாதாடினேன்.

    இதற்கு நீதிபதிகள், இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து உள்ளனர். இது தூத்துக்குடி மட்டுமல்ல தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றி ஆகும். இன்று தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் ஆகும்.

    உண்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நீதி வென்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தீர்ப்புக்கு முன் மண்டியிட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மீது போடப்பட்ட வழக்கை அ.தி.மு.க. அரசு மூடி மறைத்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தம், இந்த ஆலையை மூட வைத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் வேறு எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். அ.தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி இந்த செயலில் ஈடுபட வைத்தது. பலியான 13 பேருக்கும் நெற்றிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்துள்ளது. இது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள், வருவதற்கு முன்னரே போலீசாரால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறி திசை திருப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த அன்று இரவே நான் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தேன். வேறு யாரும் அங்கு வரவில்லை. பொது மக்களுக்கு நான் தொடர்ந்து பாதுகாவலனாக இருப்பேன்.

    சமூக போராளி முகிலன், கடந்த 15-ந் தேதி சென்னையில் இருந்து மதுரை ரெயிலில் ஏறினார். இரவு 1 மணி வரை அவரது செல்போன் உபயோகத்தில் இருந்தது. அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்சு ஆப் ஆகி உள்ளது. தற்போது எங்கே இருக்கிறார்? என்று தெரிய வில்லை. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். இல்லையென்றால் கடத்தப்பட்டு இருப்பார். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், போலீசாரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் வகையில் வைகோ, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். #vaiko #sterliteplant #supremecourt

    மாசு ஏற்படுத்தும் வகையில் ஆலைக்கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Sterlite #MaduraiHCBench
    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. அந்த தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் போது முறையாக தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர்.

    அதே போல இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புகார் அளித்தால், மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்த தயங்குகின்றனர்.


    ஆகவே மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் தூத்துக்குடி கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Sterlite #MaduraiHCBench
    வேதாந்தா நிறுவனம் வழங்கிய ரூ.100 கோடி வைப்புத்தொகையை முறையாக செலவழிக்காத விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Sterlite
    புதுடெல்லி:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ரூ.100 கோடி வைப்புத்தொகை தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டது.

    அந்த தொகை முறையாக செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த தொகையில் இருந்து இதுவரை வெறும் ரூ.7 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. எனவே, அந்த வைப்புத்தொகையை முறையாக செலவு செய்யாத தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Sterlite #SterliteCopper #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்களால் ஆலையை தொடங்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று, தலைமை செயல் அதிகாரி கூறியதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.

    ஆனால், எங்கள் தலைமை செயல் அதிகாரி அவ்வாறு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் எங்கள் முன்னுரிமை. ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எங்களால் திறக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Vedanta #LabourParty
    லண்டன்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.



    ‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.

    மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. #Vedanta #LabourParty
    ×