செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-06-25 10:58 GMT   |   Update On 2019-06-25 10:59 GMT
ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி:

ஆரணி அடுத்த கல்லேரிபட்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யபடவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆரணி- வந்தவாசி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில்:-

எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கூறினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News