செய்திகள்

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி

Published On 2019-06-21 10:35 GMT   |   Update On 2019-06-21 10:35 GMT
முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளம் மீன்மார்க்கெட் தெருவை சேர்ந்த முகமது அன்சாரி மகன் சாகுல் அமீது (வயது 32). அதே பகுதியை சேர்ந்த அலி மகன் சதாம் உசேன் (27).

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது உப்பூர் புது ரோட்டில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டோரத்தில் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சாகுல் அமீது, சதாம் உசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடி போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர். விபத்தில் பலியான 2 பேருக்கும் இன்னும் திருமணமாக வில்லை.

Tags:    

Similar News