செய்திகள்

புதுவையில் மீண்டும் துணிகரம் - ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2019-06-18 13:29 GMT   |   Update On 2019-06-18 13:29 GMT
புதுவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த 15 நாட்களில் மட்டும் 4 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த நிலையில் புதுவையில் மீண்டும் ஒரு செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வளவனூர் அருகே சிறு வந்தாடு பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மனைவி சந்திரா (வயது 60). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக நேற்று ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அப்போது டாக்டர்கள் ஸ்டிரைக்கினால் புற நோயாளிகள் பிரிவு இயங்காததால் மீண்டும் ஊர் திரும்ப சந்திரா முடிவு செய்தார். இதற்காக ஜிப்மரில் இருந்து புதுவை பஸ் நிலையத்துக்கு பஸ்சில் புறப்பட்டு வந்தார்.

இவருடன் 3 பெண்களும் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசல் இருந்ததால் சந்திரா பஸ்சில் நின்றபடியே பயணம் செய் தார்.

புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சை விட்டு சந்திரா கீழே இறங்கினார். அப்போது கழுத்தில் அணிந் திருந்த 2 பவுன் செயினை காணாமல் சந்திரா அதிர்ச்சி அடைந்தார்.

அதே வேளையில் அவருடன் பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களும் மாய மாகி இருந்தனர். அந்த பெண்கள் சந்திராவிடம் செயினை பறித்து கொண்டு முருகா தியேட்டர் சிக்னலில் இறங்கி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து சந்திரா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். ஆனால், சம்பவம் நடந்த இடம் கோரிமேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் அளிக்கும்படி உருளையன் பேட்டை போலீசார் சந்திராவை அறிவுறுத்தினர்.

அதன்படி சந்திரா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் பெண்கள் நகை அணிந்து வெளியே செல்லவே அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News