மதுரவாயல் டோல்கேட் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் - 2 பேர் பலி
போரூர்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (21). கார் டிரைவர். இவர் மதுரவாயல் ஏரிக்கரையில் நண்பர்கள் உடன் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் தனது காரில் நண்பர்களான சரண்கிஷோர் (21), பிரவின் குமார் (21), அஜித் (19) ஆகியோருடன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுரவாயல் டோல்கேட் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் வேகமாக வந்த செல்வகணேஷ் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின் புறம் வேகமாக மோதியது.
இதில் செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரண்கிஷோர், பிரவின் குமார், அஜித் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரண்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சகாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.