செய்திகள்

அரியாங்குப்பத்தில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை- பணம் கொள்ளை

Published On 2019-06-17 16:50 GMT   |   Update On 2019-06-17 16:50 GMT
அரியாங்குப்பத்தில் கல்வித்றை அதிகாரி வீட்டில் ரூ. 5 லட்சம் நகை -பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பாகூர்:

அரியாங்குப்பம் சுப்பையா நகர் பூரணாங்குப்பம் ரோட்டை சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி பிரேமா (வயது 57). இவர்  புதுவை அரசின் கல்வித்துறையின் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அரிகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்த நிலையில் பிரேமாவின் 2-வது மகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரேமா வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணம், 3 1/2 பவுன் நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

யாரோ மர்ம நபர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு செல்வதை நோட்டமிட்டு ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பணத்தை கெகள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பிரேமா அரியாங்குப்ம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News