செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே பெண் வெட்டிக்கொலை - கணவர் வெறிச்செயல்

Published On 2019-06-17 07:17 GMT   |   Update On 2019-06-17 07:17 GMT
ஓட்டப்பிடாரம் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்து மகன் பழனிமுருகன்(வயது 43). டிரைவர். இவரது மனைவி காசி ராக்கம்மாள்(35). இவர்களுக்கு ‌ஷர்மிளா என்கிற மகளும், முத்துமகேஷ்(15), தமிழ் செல்வம்(11) என்கிற மகன்களும் உள்ளனர்.

‌ஷர்மிளாவுக்கு திருமணம் ஆகி கணவர் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். முத்துமகேஷ் 10-ம் வகுப்பும், தமிழ்செல்வம் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் மனைவியின் நடத்தையில் பழனிமுருகன் சந்தேகித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பழனிமுருகன் தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிமுருகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சராமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த காசி ராக்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பழனிமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பழனி முருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News