செய்திகள்
திருச்செந்தூரில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்- டி.எஸ்.பி. பாரத் வழங்கினார்
திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாமல் வந்த 100 வாகன ஓட்டிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் இலவசமாக ஹெல்மெட் வழங்கி அதன் அவசியத்தை வலியுறுத்தி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்தில் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் அணிய காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்- காவல் துறை இணைந்து கடந்த 13-ந்தேதி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். அப்போது தலைக்கவசம் அணிவதால் உயிரிழப்பு ஏற்படாது, உயிருக்கு பாதுகாப்பு எனவே அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் வரும் வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஹெல்மெட் அணியாமல் வந்த 100 வாகன ஓட்டிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் இலவசமாக ஹெல்மெட் வழங்கி அதன் அவசியத்தை வலியுறுத்தி கூறினார். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜன், பாஸ்கர் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.