நத்தம் அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நத்தம்:
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு விதி மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருபவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பள்ளி மாணவர்கள் உள்பட 18 வயதுக்கு குறைந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிக வேகத்தில் செல்வது தொடர்ந்து வந்தது. எவ்வித பாதுகாப்பு கவசங்கள் அணியாமலும் 3 பேருக்கு மேலும் மோட்டார் சைக்கிளில் அதிக வேகத்தில் சென்று வந்தனர்.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவர்கள் ஓட்டி வந்த 15 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
போலீசார் இனிமேல் தங்கள் குழந்தைகளுக்கு மோட்டார் சைக்கிளை தரக்கூடாது. லைசென்ஸ் வாங்கும் வரை குடியிருப்பு பகுதிகளுக்குள் ஓட்டி பழக வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.